இலங்கை: வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் அல்லது வரதராஜ பெருமாள் நியமனம்?
யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு மாகாண புதிய ஆளுநராக முத்தையா முரளிதரன் அல்லது ஈபிஆர்எல்எப் வரதராஜ பெருமாள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே அண்மையில் பொறுப்பேற்றார். இதனையடுத்து அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைவரும் பதவி விலகல் கடிதங்களை கோத்தபாய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை கோத்தபாய ராஜபக்சே நியமித்திருக்கிறார்.
மேல் மாகாணம்- சீதா அரபேபொல, மத்திய மாகாணம்- லலித் யு கமகே; ஊவா மாகாணம்- ராஜா கொல்லூரே; தென் மாகாணம்- வில்லிகமகே, வடமேல் மாகாணம்- முஸம்மில் ; சப்ரகமுவ மாகாணம் - கொப்பேகடுவ ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
சுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம்
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஆளுநராக சீதா அரபேபொல பதவியேற்கிறார். இதனிடையே ஈழத் தமிழர்களின் பகுதியான வடக்கு மாகாணத்துக்கு யார் புதிய ஆளுநர் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான ஈபிஆர்எல்எப் வரதராஜ பெருமாள், முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரில் ஒருவர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.