108 விடுதலைப் புலிகள் மர்ம மரணம்- 11,000 பேர் உயிர் ஊசல்- விஷ ஊசி போட்டதாக இலங்கை மீது பகீர் புகார்
கொழும்பு: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 108 தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 11,000 முன்னாள் போராளிகள் உயிருக்குப் போராடுவதாகவும் இலங்கை ராணுவம்தான் சிறையில் இருந்தபோது விஷ ஊசி போட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான இறுதி யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தின் முடிவில் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சரணடைந்தனர். இதில் சரணடைந்தவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தனி சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் தமிழீழ அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி உட்பட 108 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
11,000 பேர் உயிர் ஊசல்
இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக மெதுமெதுவாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் உயிரிழந்துள்ளனர். தற்போது இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 11,000 விடுதலைப் புலிகள் உயிருக்குப் போராடி வருவதாக கூறப்படுகிறது.
புலிகள் சொல்வது என்ன?
இது தொடர்பாக காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45) மற்றும் செல்வி சுப்பிரமணியம் தவமணி(வயது36) ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பெரியதம்பி வசந்தகுமார் கூறியதாவது:
2009ல் வன்னியில் இடம்பெயர்ந்து குடும்பத்தோடு இராணுவத்திடம் சரணடைந்தோம். 2010 வரை பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டோம். பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம். பின்னர் வெலிக்கந்த சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டோம்.
எப்பவும் கோழி கறிதான்..
அங்கு தினமும் 3 நேரமும் கோழி இறைச்சி தரப்படும். அதனை இலங்கை ராணுவத்தினர் சாப்பிடமாட்டார்கள். ஓராண்டுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டோம். ஆனால் கடந்த 4 மாத காலமாக என்னுடைய உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல என்னுடைய உடல் மிக மோசமாக தளர்ந்து கொண்டே இருக்கிறது.
சர்வதேசம் காப்பாற்றனும்...
எனக்கு விரைவில் மரணம் நேரும் என்பது உறுதியாக தெரிகிறது. இலங்கை ராணுவ சிறையில் இருந்த போது எங்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. ஆகையால் எஞ்சிய 11,000 போராளிகளை சர்வதேச சமூகம் காப்பாற்ற வேண்டும்.
சரணடைந்தேன்...
செல்வி சுப்பிரமணியம் தவமணி கூறியதாவது:
2009-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி ஓமந்தையில் ராணுவத்திடம் சரணடைந்தேன். அதனைத் தொடர்ந்து வவுனியா பூந்தோட்ட முகாமிலும் செட்டிகுளம் முகாமிலும் தடுத்து வைத்தனர்.
ராணுவம் சாப்பிடாது...
எங்களுக்கு கோழி இறைச்சிதான் உணவாகத் தரப்பட்டது. ஒருநாள் மீன் தரப்படும். எங்களுக்கான உணவை ஒருநாளும் இலங்கை ராணுவத்தினர் சாப்பிட்டது இல்லை.
2012-ம் ஆண்டு நான் விடுவிக்கப்பட்டேன். கடந்த சில மாதங்களாக கண்பார்வை பாதிக்கப்பட்டு தலை வெடிப்பது போல இருந்து வருகிறது. இலங்கை ராணுவ முகாம்களில் இருந்த விடுதலைப் புலிகள் அனைவருமே ஒரே மாதிரியான நோய் தாக்குதலுக்குள்ளாக்கி இருக்கிறோம்.
எல்லாமே விஷம்
எங்களுக்கு தரப்பட்ட உணவு, முகாம்களில் போடப்பட்ட ஊசிகள் அனைத்தும் விஷம் என்பதை உணருகிறோம். எஞ்சிய 11,000 போராளிகளும் சாவின் விளிம்பில் உள்ளனர். அனைவரையும் சர்வதேச சமூகம் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு செல்வி சுப்பிரமணியம் தவமணி கூறியுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் இந்த பகீர் குற்றச்சாட்டு பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.