ராஜபக்சே மகன் நமல் திடீர் கைது... இந்தியாவுக்கு எதிராக போராடியதால்!
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
கொழும்பு : நீதிமன்ற உத்தரவை மீறி இந்திய துணை தூதரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள மாத்தளை ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றனர். சீன நிதியுதவியுடன் ராஜபக்சே ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தை இந்திய அரசிடம் ஒப்படைக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாததால் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போலீசார் அவர்களை கலைத்தனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 8 போலீசார் காயம் அடைந்தனர்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 6 பேர் விளக்கம் அளிக்க போலீசார் உத்தரவிட்டனர். இதனையடுத்து விசாரணைக்கு ஆஜரான நமல் ராஜபக்சே உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை அக்டோபர் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.