மன்னாரில் மண்டை ஓட்டுக் குவியல்.. சவக்குழியில் புதைக்கப்பட்டது தமிழர்களா?
கொழும்பு: இறுதிப் போர் நடந்த இலங்கையின் மன்னார் பகுதியில், புதிய பெரிய சவக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழர்களை கொன்று மொத்தமாக புதைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ராணுவத்தின் சர்வ பலத்தால் நாசகார முறையில், தமிழர்கள் குவியல் குவியலாக கடைசி நேரத்தி்ல அழிக்கப்பட்டனர். அதில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களை ஆங்காங்கே மொத்தமாக புதைத்து அடையாளம் தெரியாமல் சமாதியாக்கி விட்டது இலங்கையின் சிங்கள அரசு.
அப்படிப்பட்ட சமாதி பகுதியாகவே இந்த புதிய பகுதி தெரிகிறது. எனவே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் பதிக்க தோண்டியபோது
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள், மன்னாரில் ஒரு இடத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையை தோண்டினார்கள்.
வெளியே வந்த மண்டை ஓடுகள்
அப்போது, 6 மண்டை ஓடுகள் சிக்கின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தோண்டத் தோண்ட மண்டை ஓடுகள்
இந்நிலையில், நேற்று அதே இடத்தில் மேலும் 4 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. தோண்டத் தோண்ட மண்டை ஓடுகளே வருகின்றன.
மிகப் பெரிய சவக்குழியாக இருக்கலாம்
எனவே இந்த இடத்தில் பெருமளவிலான உடல்களைப் போட்டு மொத்தமாக புதைத்து விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அனைவருமே தமிழர்களாகவே இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. மிகப் பெரிய சவக்குழியாக இது இருக்கலாம் என்றும் தெரிகிறது.
மாத்தளையில் சிக்கிய சிங்களர் உடல்கள்
முன்பு மாத்தளை பகுதியில் கடந்த ஆண்டு 154 உடல்கள் புதைக்கப்பட்ட ஒரு பெரிய சவக்குழி கண்கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல்கள், தங்கள் இயக்கத்தினரின் உடல்கள் என்று சிங்கள மார்க்சிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கூறியது. கடந்த 1987-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டுவரை, அந்த இயக்கத்தினரை இலங்கை ராணுவம் அழித்து ஒழித்தது. அந்த சமயத்தில் கொல்லப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனா இயக்கத்தினரின் உடல்கள்தான் அவை.
இப்போது சிக்கியது தமிழர் சவக்குழியா...?
ஆனால் தற்போது கிடைத்திருக்கும் சவழக்குழியானது தமிழர்களைக் கொன்று புதைத்த சவக்குழியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக
இறுதிப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மிகப் பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தடயவியல் சோதனை
இந்த இடத்தில் சிக்கியுள்ள மண்டை ஓடுகளை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீதித்துறை சார்பில் மருத்துவப் பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.