யாழில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த 430 ஏக்கர் நிலம் விடுவிப்பு- தமிழரிடம் ஒப்படைப்பு!!
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 430 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ராணுவம் ஆக்கிரமித்திருந்த வளலாய் பிரதேசத்தின் 233 ஏக்கர்; வசாவிளான் கிழக்கு பகுதியில் 197 ஏக்கர் நிலத்தை தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நிலத்தை ஒப்படைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன பேசியதாவது:
எனது ஆட்சியில் இனம், மத அடிப்படையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நாட்டில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம் இன மக்கள் இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் நிலப்பிரச்னைகள் தீர்க்கப்படும். வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சிறந்த வாழ்க்கைச் சூழலை வழங்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு சிறிசேன பேசினார்.
ரணில்- விக்னேஸ்வரன் மோதல்
இந்நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டதாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ரணில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.