இலங்கை அமைதி பூங்காவாகிவிட்டதாம்! சொல்கிறார் ராஜபக்சே!
கொழும்பில் இருந்து, இலங்கை விமான நிலையத்திற்கு செல்வதற்காக 28 கி.மீ.தூரத்துக்கு சாலை சீன அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிபர் ராஜபட்ச பேசினார்.
அப்போது அவர், ''2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்குப் பிறகு இலங்கை மண்ணில் பயங்கரவாதச் செயல்களோ, ரத்த ஆறோ ஓடவில்லை. நாடு அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது.
எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மக்கள் எனக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.
இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். இதற்காக 6 மாதத்துக்கு ஒரு முறை ஜெனீவா சென்று அதற்கான பதிலை அளித்து வருகிறோம்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் பற்றி மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் பற்றியோ, குண்டு வீச்சுகள் பற்றியோ எந்த கேள்வியும் கேட்கவில்லை'' என்றார்.