சிங்கள எம்பிக்கள் எதிர்ப்புக்கு பணிந்த சிறிசேன... இந்தியாவுக்கான பாலம் இல்லை என மறுப்பு
கொழும்பு: சிங்கள எம்.பிக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தியா- இலங்கை இடையே பாலம் கட்டப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. இதை இலங்கை அமைச்சர்களும் ஆமோதித்து கூறி வந்தனர்.
ஆனால் இலங்கையின் தலைமன்னாரை இந்தியாவின் தனுஷ்கோடியுடன் இணைக்கும் இப்பாலத்துக்கு சிங்களர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பாலம் அமைத்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு இலங்கை அடிமைப்பட்டுபோய்விடும் என்று சிங்கள எம்பி வாசுதேவ நாணயக்கார கூறியிருந்தார்.
மற்றொரு சிங்கள எம்பியோ, இதுபோன்ற ஒரு பாலம் அமைந்தால் இலங்கையின் வடக்கு மாகாணம் தமிழகத்துடன் இணைந்துவிடும். ஆகையால் இந்த பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் எனக் கூறியிருந்தார்.
இத்தகைய எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.