வெளிநாட்டு சிறுநீரகங்களை தானம் பெற இலங்கை அரசு தடை
வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இந்திய இளைஞர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்னி தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீரக தானத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இலங்கையில் சிறுநீரக தானம் வழங்கும் கொடையாளர்களுக்கு மருத்துவமனைகளில் பணம் வழங்கக்கூடாது. மேலும் உடல் உறுப்புகளை தானம் வழங்குவது இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை இளைஞர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகளவில் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக 2012ஆம் ஆண்டில் முதன்முதலாக தகவல்கள் வெளியாகின.
2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை தானம் செய்திருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததாகக் கூறி கொழும்புவிலிருந்து அகமதாபாத்திற்கு அவரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
குஜராத் போலீசார் தினேஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவரது சிறுநீரகம் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுநீரகங்கள் திருட்டில் ஈடுபட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அது போல இலங்கையில் 7 பேரை கொழும்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் இருந்து இளைஞர்களைக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் அதிகப் பணம் கொடுத்து சிறுநீரகங்கள் வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.