இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் கழற்றிவிடப்பட்ட கருணா.. 'நோ' சீட்...
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் "கருணா"வுக்கு சீட் வழங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. நியமன எம்.பி.யாகவும் கருணாவை அந்த கூட்டமைப்பு நியமிக்கவில்லை. இதனால் இலங்கை அரசியலில் இருந்து கருணா முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி இலங்கை அரசாங்கம் பக்கம் போனார். அவருக்கு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிப் போரில் இலங்கை ராணுவத்துக்கு உடந்தையாக இருந்தவர் கருணா. கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு 600 சிங்கள போலீசார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கருணா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபரின் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் தமக்கு போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கருணா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமக்கு நியமன எம்.பி. பதவியாவது கிடைக்கும் எனவும் கருணா எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள நியமன எம்.பி.க்கள் பட்டியலில் கருணாவின் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் அவர் கடும் ஏம்மாற்றமடைந்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை அரசியலில் இருந்து கருணா முற்று முழுதாக ஓரம்கட்டப்பட்டுவிட்டார்.