அனைத்துத் தமிழ் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு கிடையாது: ரணில் விக்ரமசிங்கே
கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அதிபர் மைத்திரிபால சிறிசேனா விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 12-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் 16 பேரும் அதிபர் சிறிசேனாவை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பிரதான எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன், நீதித்துறை அமைச்சர் விஜியதாச ராஜபக்சேவை சந்தித்து பேசினார். தொடர்ந்து பொலன்னருவாவில் அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் சிறிசேனாவையும் அவர் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் 3 விதமாக பிரிக்கப்படுகின்றனர், குற்றச்சாட்டுகள் இன்றி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், வழக்கு விசாரணை நடைபெறுபவர்கள், வழக்கு விசாரணை நடைபெறுபவர்கள் மற்றும் விசாரணை முடிந்து தண்டனை அனுபவிப்பவர்கள் என 3 விதமாக தரம் பிரிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள். எனவே அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த கைதிகள் ‘‘ இதனை அதிபர் சிறிசேனா நேரடியாக அறிவிக்க வேண்டும்'' என்றனர். எனினும், தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் முடித்துக் கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நேற்று இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வது சாத்தியமில்லாதது என்று ரணில் விக்ரமசிங்கே கூறியதாக தேசிய பேச்சுவார்த்தை குழு அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனினும், காவல் துறை சார்ந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள கைதிகளை ஜாமினில் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.