இலங்கை போலீசால் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலைக்கு கண்டனம்- முழு அடைப்பால் வடமாகாணம் 'வெறிச்'
யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் 2 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இலங்கை வடமாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் 2 யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் வெறிச்சோடி காணப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்களை இலங்கை போலீசார் இனவெறியுடன் சுட்டுக் கொலை செய்தனர். ஆனால் மாணவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
பொதுமக்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் 2 மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது அம்பலமானது. இது தமிழர்களை கொந்தளிக்க வைத்தது.
இப்படுகொலையைக் கண்டித்து நேற்று மாணவர்கள் யாழ். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை போலீசைக் கண்டித்து நடைபெற்ற இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் வடக்கு மாகாணம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மருந்து கடைகளைத் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்களும் இன்று செயல்படவில்லை.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் முழுவதுமாக இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியுள்ளது.