இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: ரணில், மைத்ரிபால, சந்திரிகாவுடன் ஆலோசனை
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக களம் இறங்கும் மைத்ரிபால சிறிசேனவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் நடைபெறும் சர்வதேச கடற்பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள அஜித் தோவல் கொழும்பு சென்றுள்ளார். அதே நேரத்தில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து ஓரணியில் திரண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அடுத்தடுத்து அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியாக அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் மைத்ரிபால சிறிசேன, அவரை களமிறக்கிய முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, அதிபர் தேர்தல் ஆகியவை குறித்து விரிவாக பேசப்பட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இன்று காலை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார் அஜித் தோவல். ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.