இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. ரணில் அதிரடி!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விகரமசிங்கே வழங்கு தொடுக்க உள்ளார்.
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விகரமசிங்கே வழங்கு தொடுக்க உள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு இருக்கிறது.
கலைப்பு
இதையடுத்து நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிக்கை வெளியிட்டார்.அங்கு பிரதமர் பதவிக்காக ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகியுள்ளது.
ஏன் நீக்கினார்
இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டு இருந்தது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டு இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டு இருந்தது. சிறிசேனா கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதா காரணத்தால் ராஜபக்சே பிரதமராக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. குதிரை பேரமும் படியவில்லை என்பதால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த சிறிசேனா முடிவெடுத்தார்.
நாளை வழக்கு
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விகரமசிங்கே வழங்கு தொடுக்க உள்ளார். அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாக வழக்கு தொடுக்க உள்ளார். அதிபர் சிறிசேனா, ராஜபக்சே ஆகியோரின் பெயரை நாளை இவர் மனுவில் குறிப்பிட உள்ளார்.
என்ன கோரிக்கை
இந்த நிலையில் ரணில் தனது மனுவில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறானது என்று உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார். அதிபர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைத்தது தேர்தலின் போது முறைகேடு நடக்க வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் உடனே நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார்.