இலங்கையில் இந்திய ராணுவ தளபதி... பாக். போர்க்கப்பலும் 'நல்லெண்ண பயணமாக' இன்று வருகை
கொழும்பு: இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் இலங்கையில் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் பாகிஸ்தானின் பிரமாண்ட போர்க் கப்பல் ஒன்று கொழும்புக்கு இன்று வருகை தர இருக்கிறது. இந்திய ராணுவ தளபதியின் பயணத்தைப் போல பாகிஸ்தான் போர்க்கப்பலும் 'நல்லெண்ண பயணத்தில்' வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது.
இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் 5 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று கொழும்பு வருகை தந்தார். கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய துணைத் தூதர் பக்ஷி, இலங்கை ராணுவ தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு தல்பீர்சிங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அமைதிப் படை நினைவிடத்தில்...
பின்னர் கொழும்பில் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதிப்படையின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இன்று இலங்கை பிரதமர் ரணில் உள்ளிட்டோரை தல்பீர்சிங் சந்திக்க உள்ளார். மேலும் இலங்கையின் வடக்குப் பகுதியான தமிழர் பகுதியில் உள்ள இலங்கை ராணுவ முகாம்களுக்கும் செல்ல தல்பீர்சிங் திட்டமிட்டுள்ளார்.
பாக். போர்க் கப்பல்
இந்திய ராணுவ தளபதி இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள இந்த நிலையில் பாகிஸ்தானின் பி.என்.எஸ். சம்சீர் என்ற பிரமாண்ட போர்க் கப்பல் கொழும்புக்கு இன்று வருகை தர உள்ளது. இந்திய ராணுவ தளபதியின் பயணத்தை நல்லெண்ண பயணமாக குறிப்பிடும் இலங்கை, பாகிஸ்தான் போர்க் கப்பலின் வருகையையும் நல்லெண்ண பயணம் என குறிப்பிடுகிறது. மொத்தம் 4 நாட்கள் கொழும்பில் பாகிஸ்தான் போர்க்கப்பல் முகாமிட உள்ளது.
கடற்படையுடன் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் போர்க் கப்பலில் வரும் ராணுவ அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அதிருப்தி
இந்திய ராணுவ தளபதியையும் பாகிஸ்தான் போர்க் கப்பலையும் ஒரே நேரத்தில் இலங்கை வரவழைத்திருப்பது இந்திய பாதுகாப்பு வல்லுநர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.