இந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு?
யாழ்ப்பாணம்: பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அங்கிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படும் நிலையில் தமிழகம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னைக்கு விமான சேவைகளை இயக்க வேண்டும் என்பது ஈழத் தமிழர்களின் கோரிக்கை.
இலங்கை போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த விரிவாக்கப்பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கு இந்தியாவும் பெருமளவு நிதி உதவி செய்து வருகிறது.
முதலில் பலாலிக்கு கொழும்பு, மத்தல விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும். இதையடுத்து இந்திய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படும் என அர்ஜூன ரணதுங்க கூறியிருந்தார்.
தற்போது இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவைகளில் தமிழ்நாட்டு நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநில விமான நிலையங்களுக்குத்தான் பலாலியில் இருந்து விமான சேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்படியான நிலையில் தமிழ்நாட்டின் திருச்சி,சென்னை,மதுரை விமான நிலையங்கள் இந்த பட்டியலில் இடம்பெறாது பெரும் ஏமாற்றத்தையும் பலாலி விமான நிலைய விரிவாக்கத்தை கேள்விக்குறியாக்கியும் உள்ளது.