பிரபாகரனைக் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: இலங்கை முன்னாள் எம்பி
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இறப்பு சான்றிதழை அரசு வழங்காததால் அவரை காணாமல் போனோர் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும் என இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார். இந்த வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதேபோல பொட்டு அம்மான், நளினி, முருகன், அகிலா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் வழக்கிலிருந்து பிரிக்கப்பட்டு தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தனி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், இலங்கையின் நந்திக் கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை அரசு வழங்காததால் அவரைக் காணாமல் போனோர் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பிரபாகரனைக் கண்டுபிடிக்கக் கோரி அரசிடம் முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காகப் பிரபாகரனின் உறவினர்களிடம் பேசப்போவதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.