இலங்கை அமைச்சரவையில் மாற்றம்... சட்டம் ஒழுங்கு துறை ரணில்விக்ரமசிங்கேவிடம் ஒப்படைப்பு!
இலங்கை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு துறை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொழும்பு: அண்மையில் நடந்து முடிந்த இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றப்பட்டதில் சட்டம் ஒழுங்கு துறை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது வரை அந்தத் துறையை கவனித்து வந்த சகல ரத்னநாயகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கேவிடம் இந்தத் துறையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிகர் மகிந்த ராஜபக்ஷே மீதான வழக்குகளை சரியான அளவில் அணுகவில்லை என்பதால் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதே போன்று வேறு சில அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் யூஎன்பி கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் பொறுப்புகளே அதிக அளவில் மாற்றத்தை சந்தித்துள்ளன.
திடீர் மாற்றம் ஏன்?
அரசை பலப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் விதமாகவும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 10ம் தேதி இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் கட்சியும், ரணில் விக்ரமசிங்கே கட்சியும் போட்டியிட்டன.
உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி
ஆளும் கட்சிகளை தோற்கடித்துவிட்டு எதிர்க்கட்சியான ராஜபக்ஷேவின் கட்சி உறுப்பினர்கள் இந்த தேர்தலில் அதிக வெற்றிகளை அள்ளினர். ராஜபக்சேவின் கட்சி மொத்தமுள்ள 341 உள்ளாட்சி பதவிகளில் 239 பதவிகளை கைப்பற்றியது.
பதவி விலக வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிரதமர் ரணில்விக்ரமசிங்கேவின் மோசமான செயல்பாடே காரணம் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாகவும், ஆனால் இதற்காக பதவி விலக வேண்டியதில்லை என்றும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார்.
புதிய பொருளாதார திட்டம்
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அதிபர் சிறிசேனாவின் நேஷனல் எகனாமிக் கவுன்சில், புதிய பொருளாதார திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த வாரத்தில் இந்த திட்டம் வெளியாகும் என்றும் இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வி காணும் வகையில் இது அமையும் என்று அரசு கூறியுள்ளது.