புங்குடுதீவு மாணவி படுகொலை- யாழ்ப்பாணம் நீதிமன்றம் முற்றுகை- போலீசார் கண்ணீர்புகை குண்டு வீச்சு!!
யாழ்ப்பாணம்: புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் யாழ்ப்பாணம் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. தங்களுக்கு நீதி வழங்கக் கோரி நீதிமன்றத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளள வீசினர்.
புங்குடுதீவைச் சேர்ந்தவர் மாணவி வித்யா. இவர் அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுபாதக செயலைக் கண்டித்து ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாண குடா நாடே கொந்தளித்துப் போயுள்ளது. பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இன்று யாழ்ப்பாணத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவி வித்யாவை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் உச்சகட்டமாக இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்தில் நுழைந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த மோதலில் போலீசார் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை அகற்றுவதற்காக கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசினர். இதனால் யாழ்ப்பாண நகரத்தில் பெரும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களால் யாழ்ப்பாணம் போர்க்கள நிலைமைக்கு திரும்பியதாக காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.