அதிபர் தேர்தலில் தோற்கடித்து சர்வதேச நீதிமன்றத்தில் என்னை நிறுத்த முயற்சி: சொல்வது மகிந்த ராஜபக்சே!
கொழும்பு: தம்மைப் அதிபர் தேர்தலில் தோற்கடித்து சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்த சூழ்ச்சிகள் நடப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது:
அல்ஜசீரா தொலைக்காட்சி என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. என்னை அதிபர் தேர்தலில் தோற்கடித்து போர்க் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் நிறுத்த நினைக்கிறார்கள்.
அதிபராக நான் பதவி வகிக்கும் வரை என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் இத்தகைய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தோல்வியுறச் செய்து தாருங்கள் நாம் ராஜபக்சேவை கொண்டு சென்று சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்றே சம்பந்தப்பட்டவர்கள் கோருகின்றனர்.
நான் மக்களுக்கு நாம் உயிர்தானம் வழங்கினேன். அப்படி செய்ததற்காக எனக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதானா?. தாய் நாடு மீது நம்பிக்கைகொண்டு தாய் நாட்டின் மீதான உணர்வைக் கொண்டிருப்பதே கடமையாக கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்றதால் பெருமளவு நிதி செலவானது, மனித உயிர்கள் இழக்கப்பட்டன. நாட்டில் நிலையான அரசாங்கம் இல்லாவிட்டால், தொடர்ந்து அரசு மாறி மாறி வந்தால் வளர்ச்சியை முன்னெடுப்பது கடினம்.
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.