ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம்... சிறிசேனா ஆதரிப்பார் என ராஜபக்சே நம்பிக்கை!
நிதி மோசடி, கலவரத்தை கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது முன்னாள் அதிபர் ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில்விக்ரமசிங்கே மீது எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆதரவு தெரிவிப்பார் என்று ராஜபக்சே நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி கண்டது. ஆளும்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகளால் அதிருப்தியடைந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு கோரினார். ஆனால் சிறிசேனாவின் இந்த கோரிக்கையை ரணில் மறுத்துவிட்டார்.
எனினும் கண்டியில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரணில் மீதான அதிருப்தி ஸ்ரீசேனாவிற்கு அதிகரித்தது. இதனால் அவர் வசம் இருந்த சட்டம்- ஒழுங்குத்துறை அமைச்சர் பதவியை சிறிசேனா பறித்தார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் மீது ராஜபக்சேவின் இலங்கை மக்கள் முன்னணி அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அந்தக் கட்சி அளித்துள்ளது.
சிறிசேனா ஆதரிப்பாரா?
நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத்தவறி விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த தீர்மானமானது நாளை மறுதினம் அதாவது ஏப்ரல் 4-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிபர் ஸ்ரீசேனா ஆதரவு தெரிவிப்பார் என்று நம்புவதாக ராஜபக்சே கூறியுள்ளார்.
2020 வரை கலைக்க முடியாது
2015ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ராஜபக்சே ஆட்சியை தோற்கடித்தனர். இலங்கை நாடாளுமன்றத்திற்கு சட்டப்படி 2020 வரை கலைக்க முடியாது.
நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற மொத்தமுள்ள 225 உறுப்பினர்களின் 2ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவ்வாறு ஆதரவு கிடைத்துவிட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்.
ராஜபக்சேவின் பிரதமர் கனவு
ஏற்கனவே 2 முறை ராஜபக்சே அதிபராக இருப்பதால் சட்ட விதிகளின்படி அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை. எனினும் ராஜபக்சே பிரதமராக முடியும், பிரதமர் கனவிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ராஜபக்சே கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.