ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடிய 'கிளிகள்'.. தேடி தேடி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைப்பு!!
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மாளிகையில் இருந்து 4 வெளிநாட்டு ரக கிளிகள் தப்பி ஓடிவிட்டன. இவற்றை தேடி ஒப்படைக்க 'தொலைபேசி' எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் கதி என்னவென்று தெரியாமல் நாள்தோறும் 'இழவு' நாளாக கழித்துக் கொண்டிருக்கின்றனர் உறவுகள்.. ஆனால் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவோ கிளிகளுக்காக 'இலவு காத்த' கிளியாக கடந்த சில நாட்களாக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டாராம்..
மகிந்த ராஜபக்சவின் மாளிகையில் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த 4 மெக்கோ கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இவை இந்திய மதிப்பில் தலா ரூ50 ஆயிரம் மதிப்பிலானவை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிளிகள் 4-ம் சொல்லி வைத்தார்போல மகிந்த ராஜபக்சேவின் மாளிகையை விட்டு தப்பி ஓடிவிட்டன.
இதில் அதிர்ச்சியும் துயரமும் அடைந்து போனராம் ராஜபக்சே. உடனே ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ராஜபக்சேவின் கிளிகள் தொலைந்து போய்விட்டன.. கண்டுபிடிப்போர் தகவல் தரவும் என்று கூறி ஒரு எண்ணையும் கொடுத்துவிட்டார்..
அவ்வளவுதான் புலம்பெயர் தமிழர்கள் அந்த எண்ணில் அழைத்து இத்தனை ஆயிரம் தொலைந்து போன நிலையில் உங்கள் வீட்டு கிளிகளுக்காக இத்தனை கரிசனமா என்று ஏகத்துக்கும் வெளுத்து வாங்கிவிட வெலவெலத்துப் போய்விட்டனர். ஆனால் அசராத இலங்கை போலீசார் தேடி தேடி இப்போது ராஜபக்சேவின் கிளிகள் நான்கையும் கண்டுபிடித்து மீண்டும் அவரது 'மாளிகை சிறை'யில் அடைத்துவிட்டனராம்!
புலிகளுக்கு மட்டுமல்ல..கிளிகளுக்கும் சுதந்திரமில்லையே!!