இலங்கை உள்ளாட்சி தேர்தல்: சிங்களர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி முன்னிலை
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் சிங்களர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி முன்னிலை வகிக்கிறது.
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிங்களர் பகுதிகளில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தென்னிலங்கையில் சிங்களர் பகுதிகளில் ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 45% வாக்குகளைப் பெற்று பல இடங்களில் வென்றுள்ளது. அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 30% வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் தமிழர் பகுதியில் உள்ளாட்சிகளில் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 7,03,117 வாக்குகளைப் பெற்று மொத்தம் 909 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 4,69,986 வாக்குகளைப் பெற்று 459 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75, 532 வாக்குகளுடன் 169 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.