யாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!
யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய 'லைக்கா' நிறுவனத்தின் சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை நடத்தும் இலவச வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழரான சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனம் தமிழ் சினிமா துறையிலும் இறங்கியது. ஆனால் சிங்கள ராஜபக்சே குடும்பத்தினரின் தொழில் கூட்டாளியான லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை லைக்கா தயாரித்ததால் அப்படம் வெளியாவதில் கடும் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ந் தேதி இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.