இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்... சாடும் ரணில்
அம்பந்தோட்டா: இந்தியாவுடனான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சாடியுள்ளார்.
இந்தியாவுடனான பொருளாதாரம்- தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இலங்கையின் இயற்கை வளத்தை இந்தியா கொள்ளையடிக்கவே இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை பயணம் மேற்கொண்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், இலங்கையின் தேசதுரோகிகள் என கடுமையாக சாடியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. அம்பந்தோட்டாவில் செய்தியாளர்களிடம் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:
இந்தியாவுடன் பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இத் திட்டத்துக்கு பல நிறுவனங்கள், சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இலங்கையின் பொருளாதாரத்தை அன்னிய நாட்டுக்கு தாரைவார்க்கும் முயற்சி என விமர்சிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வேலைவாய்ப்புக்காக இலங்கைக்கு இந்தியர்கள் அதிக அளவில் வருகை தருவர். இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்ற தவறான கருத்தையும் பரப்பி வருகின்றனர்.
உண்மையில் இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை இளைஞர்களுக்குதான் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆகையால் இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க நினைக்கும் சக்திகள் தேசத் துரோகிகள்தான். இந்தியாவைப் போன்று பெரிய சந்தையில்லாத சீனா, இலங்கையில் முதலீடு செய்வதால் எந்த ஒரு பயனுமே இல்லை.
வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறோம். அதை நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமை.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.