ஒரு நாட்டுக்கு இரு பிரதமர்களா?, சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ரணில்!
Recommended Video
கொழும்பு: ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்களை நியமித்துள்ள சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே நீதிமன்றத்தை நாடப் போவதாக கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனா ஆதரவுடன் மகிந்த ராஜபட்ச பிரதமராக பதவியேற்றுள்ளது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபட்ச தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.
இந்த நிலையில் நாட்டின் அரசியல் சாசனத்தின் 42-வது ஷரத்தின் நான்காவது பிரிவின் அடிப்படையில் நான்தான் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கே, அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். சிறிசேனாவின் இந்த நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அதே போல் ராஜபட்சவும் சிறிசேனா ஆதரவுடன் பதவியேற்ற நான்தான் பிரதமர் என்று கூறினார். தற்போது வரை, இரு தரப்பினரும் தாங்கள்தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர். இலங்கை அரசியல் அமைப்பு சாசனம் 19ன் படி ஆட்சியில் இருக்கும் பிரதமரை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தால் மட்டுமே ஒருவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க இயலும்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிசேனா மற்றும் ராஜபட்ச கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95. ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியில் 106 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையினை நிரூபிக்க அவருக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்நாட்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.