மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்... இலங்கை வடக்கு மாகாண முதல்வர் அறிவிப்பு
கொழும்பு: வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்துள்ளார் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.
கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள்.
மோடியுடனான சந்திப்பின் போது இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். மேலும், இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் மோடி பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கொடுத்தனுப்பிய மனுவையும் தமிழ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட மோடி, அவர்களிடம் மூலம் விக்னேஸ்வரனை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கைத் திரும்பிய தமிழ் எம்.பி.க்கள் இது தொடர்பாக விக்னேஸ்வரனிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட விக்னேஸ்வரன், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்றும், அப்போது வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான இந்திய பிரதமரின் முறைப்படியான அழைப்பு கிடைத்தவுடன் தாம் உடனடியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.