விடுதலைப் புலிகளின் கப்பல் கேப்டன் ரவிசங்கரை கனடாவில் கைது செய்ய இலங்கை மும்முரம்!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் கேப்டனாக பணிபுரிந்த ரவிசங்கர் என்பவரை கனடாவில் கைது செய்ய இலங்கை அரசு மும்முரம் காட்டி வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டி எழுப்ப முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை அரசு அண்மைக்காலமாக பலரையும் கைது செய்து வருகிறது. இதன் ஒருகட்டமாக புலிகளின் கடற்படையில் பணியாற்றிய திருநாவுக்கரசு பிரதீபன் என்பவர் கடந்த வாரம் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கனடாவில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை கேப்டன் ரவிசங்கரை இப்போது இலங்கை அரசு குறிவைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கப்பல்கள் மூலம் ஆயுதங்களைக் கொண்டு வந்தார் ரவிசங்கர் என்பது வழக்கு. இது தொடர்பான வழக்கு ஒன்றில் ரவிசங்கருக்கு வவுனியா நீதிமன்றம் 30 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.
தற்போது கனடாவில் வசித்து வரும் ரவிசங்கரை கைது செய்ய இண்டர்போலின் உதவியையும் இலங்கை அரசு நாடியிருக்கிறது. அதற்கான ரெட் நோட்டீஸையும் இலங்கை அரசு பிறப்பித்துள்ளது.