இலங்கையில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்… மியான்மருக்கு நாடு கடத்தப்படும் அபாயம்
இலங்கையில் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த அகதிகள் மீண்டும் மியான்மருக்கே நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு: அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்ததாக இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 ரோஹிங்கியா அகதிகள் மியான்மருக்கு நாடு கடத்தப்படக்vகூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் மற்றும் வழக்கறிஞர் சிராஜ் நூர்டின் உள்ளிட்ட மூவர் கொண்ட குழு கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த இவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு
இதனைத் தொடர்ந்து மே 2ஆம் தேதி தஞ்சாவூர் அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினரால் நான்கு இந்தியர்கள் உட்பட 30 மியான்மர் ரோஹிங்கியா அகதிகள் மீதும் வெளிநாட்டினர் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.
மியான்மர் அகதிகள்
மியான்மரைச் சேர்ந்த இந்த 30 ரோஹிங்கியா அகதிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் அகதிகளாக பதிவுச் செய்யப்பட்டவர்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் அதிராம்பட்டினத்தில் தங்கியுள்ளார்கள்.
அகதி வாழ்க்கை
மியான்மரில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் புக முயற்சித்து வருகின்றனர். நிலையான வாழ்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் ஆஸ்திரேலியா பயணத்தை தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
வெளியேற்றும் முயற்சி
கடல் வழியாக வரக்கூடிய அகதிகளை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பி வருவதுடன் தனது தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் பல்வேறு வழிகள் மூலம் வெளியேற்ற முயற்சி வருகிது என்பது குறிப்பிடத்தக்கது.