இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்களர் தாக்குதலுக்கு காரணமான 'கொத்து பரோட்டா' விவகாரம்
முஸ்லிம்கள் நடத்தும் ஹோட்டல்களில் சிங்களருக்கு ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்பட்ட கொத்து பரோட்டா வழங்கப்படுவதாக கிளம்பிய வதந்திதான் அடிப்படை காரணம்.
கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்களர் தாக்குதலுக்கு அடிப்படை காரணமே 'ஆண்மை குறைவு' ஏற்படுத்தும் மருந்துகள் கொத்து பரோட்டாவில் கலக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட வதந்திதான் என கூறப்படுகிறது. தற்போது கொத்து பரோட்டாவில் அப்படியான மருந்துகள் கலக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அம்பாறையில் முஸ்லிம் ஒருவர் நடத்தும் ஹோட்டலில் கொத்து பரோட்டாவில் சிங்களருக்கு ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து பவுத்த பிக்குகள் தலைமையில் அந்த ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டது.
அம்பாறையில் தொடங்கிய இத்தாக்குதல்தான் முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலின் கொத்து பரோட்டா மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
ஆனால் கொத்து பரோட்டாவில் ஆண்மை குறைவை உருவாக்கும் எந்த மருந்துகளும் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு வருவதற்குள் அம்பாறை, கண்டி மாவட்டங்களில் பெருமளவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதும் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவதற்கு முஸ்லிம்கள் வழங்கிய உளவு ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது என இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.