சரத் பொன்சேகாவுக்கு பீல்டு மார்ஷல் விருது! இந்தியாவும் விருது வழங்கியது!!
கொழும்பு/ஜோத்பூர்: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டின் உயரிய விருதான பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதத்தை ஒழித்ததாக கூறி இந்தியாவிலும் சரத் பொன்சேகாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்சே முதல் முறையாக அதிபர் பதவியேற்றபோது ராணுவ தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா. இவரது தலைமையின் கீழ் தான் இலங்கை ராணுவம் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் ராஜபக்சே அரசு அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தியது. ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உலக நாடுகளின் அழுத்தங்களால் 2012-ம் ஆண்டு பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு பொன்சேகா ஆதரவளித்தார். இதற்கு பிரதிபலனாக பொன்சேகா பாதுகாப்பு செயலராக அல்லது அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் மேற்குலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதே நேரத்தில் பொன்சேகாவிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. இதன் உச்சமாக இலங்கையின் "பீல்டு மார்ஷல் " என்ற உயரிய பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் சிறிசேன இதனை வழங்கி பொன்சேகாவை சிறப்பித்தார்.
முன்னதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் இயக்குநராக உள்ள இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற கருத்தரங்கிலும் சரத்பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.