நந்திக் கடலில் பொட்டு அம்மானை விட்டு விட்டு யுத்த களம் திரும்பிய பிரபாகரன்: பொன்சேகா 'புது குண்டு'
கொழும்பு: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தின் போது நடந்திக் கடலுக்கு பொட்டு அம்மானும் பிரபாகரனும்தான் சென்றனர்; ஆனால் பிரபாகரன் தனியே யுத்த களத்துக்கு திரும்பினார் என்று அப்போதைய இலங்கை ராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா புது தகவலை தெரிவித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதியன்று யுத்தம் முடிவடைந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அன்றும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்று அண்மையில் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
இந்த நிலையில் பொட்டு அம்மான் குறித்தும் தற்போது சரத் பொன்சேகா தகவல்களை கூறியிருக்கிறார். இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பொன்சேகா,
இறுதி யுத்தத்தின் போது பிரபாகரனும் பொட்டு அம்மான் உள்ளிட்ட சிலரும் நந்திக் கடல் நோக்கி சென்றனர். ஆனால் பிரபாகரன் மட்டுமே யுத்த களத்துக்குத் திரும்பி வந்தார்.
இந்த தகவல் மட்டும் எங்களுக்கு தெரியும். அனேகமாக பொட்டு அம்மான் அங்கே உயிரிழந்திருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.
மேலும் பிரபாகரனை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தால் இப்போது கேபிக்கு வழங்கியிருக்கும் சலுகையை வழங்கியிருப்பார்கள்; அல்லது வடகிழக்கு முதல்வர் பதவியை கொடுத்திருப்பார்கள் என்றும் பொன்சேகா கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக பொட்டு அம்மான் தமிழகத்தில் குருடீ என்ற பெயரில் தலைமறைவாக இருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் பொன்சேகாவின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.