சரத்பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு! குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்தார் இலங்கை அதிபர் சிறிசேன!
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர் மீதான அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. பின்னர் 2010 ஆண்டுத் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இலங்கையில் ஐந்து நட்சத்திர ஜெனரல் தகுதி கொண்ட இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா, நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யுமானார்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததுமே ஊழல், மோசடி குற்றச்சாட்டின்பேரில் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பொன்சேகா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இதனால் ஜெனரல் பதவி உட்பட இராணுவப் பட்டங்கள், விருதுகள் அனைத்தையும் மகிந்த ராஜபக்சே அரசு பறித்தது. இராணுவப் பதிவேடுகளிலிருந்தும் பொன்சேகாவின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனவை சரத்பொன்சேகா ஆதரித்தார். அப்போது தாம் வெற்றி பெற்றால் பொன்சேகா மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வேன் என்று மைத்ரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவில், சரத்பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர் மீதான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சரத்பொன்சேகா மீண்டும் ஜெனராலகவும், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட விருதுகள், பதக்கங்கள் அனைத்தும் திருப்பியும் ஒப்படைக்கப்படுகிறது.