யுத்தம் முடிந்ததாக இலங்கை அறிவித்தபோது உயிருடன் இருந்தார் பிரபாகரன்- சரத் பொன்சேகா 'திடுக்' தகவல்
கொழும்பு: இலங்கை அரசு இறுதி யுத்தம் முடிந்ததாக 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி அறிவித்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருந்தார் என்று அப்போதைய ராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி- மைத்ரிபாலசின் சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசை அமைத்துள்ளது. அண்மையில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, நியமன எம்.பி.யாக்கப்பட்டு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சரத்பொன்சேகா நீண்ட உரையாற்றினார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பான பல்வேறு தகவல்களை அவர் அம்பலப்படுத்தினார். அவர் பேசியதாவது:
யுத்தம் முடியும் முன்பே...
2009ஆம் ஆண்டு மே 16-ந் தேதியன்று வெளிநாட்டில் இருந்து ராஜபக்சே நாடு திரும்பினார். அப்போது யுத்தம் முடியவில்லை. ஆனால் யுத்தத்தில் வென்றாக மண்ணை முத்தமிட்டார் ராஜபக்சே. பின்னர் 18-ந் தேதியன்று என்னை அழைத்து பதவி உயர்வு கொடுத்தார். அன்றும் கூட யுத்தம் முடியவில்லை.
மே 19-ல் உயிருடன் இருந்த பிரபாகரன்
பின்னர் மே 19-ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடனேயே இருந்தார். அப்போதுகூட யுத்தம் முழுமையாக முடிவடையவில்லை. அன்று நாடாளுமன்றம் முடிந்து காரில் சென்றபோதுதான் பிரபாகரன் சடலம் கிடைத்ததாக எனக்கு கூறினர். யுத்ததின் வெற்றி தங்களால்தான் என சொல்லும் மகிந்த ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் யுத்தம் எப்போது முடிந்தது என்பதைக் கூட அறிய விரும்பவில்லை.
தோட்டாக்களே இல்லை...
2008ஆம் ஆண்டில் 4 மாதங்கள் இலங்கை ராணுவத்துக்கு தோட்டாக்களே இல்லை... ஆகையால் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினோம். பின்னர் பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் எனக்கிருந்த நட்பின் மூலம் தோட்டாக்கள் வரவழைக்கப்பட்டது. யுத்த செலவுகளின் பெயரில் பெருமளவிலான பணம் ராஜபக்சே குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டது.
ஜாதகத்தை திருடி சென்றனர்
நான் ராணுவ தளபதியானதும் என் ஜாதகங்களை ராஜபக்சே குடும்பத்தினர் திருடிச் சென்றனர். எங்கே நான் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவேனோ என ஜாதகத்தை வைத்து கணித்து பார்த்திருக்கின்றனர்.
500 கிலோ தங்கம்
நான் ராணுவ தளபதியாக இருந்த போது புலிகளிடம் இருந்து 200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பசில் ராஜபக்சே 110 கிலோ தங்கம்தான் எடுக்கப்பட்டதாக கூறினார். அனேகமாக 400 முதல் 500 கிலோ வரையிலான தங்கம் புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யபப்ட்டிருக்கலாம்.
அதிபர் தேர்தல்
2015 அதிபர் தேர்தலில் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இருந்ததால் மைத்ரிபால சிறிசேன வெல்ல முடிந்தது. அப்படி அவர் தோற்றிருந்தார் அவர், நான் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் சிறையில்தான் இருந்திருக்க வேண்டியதிருக்கும்.
கோத்தபாயவை தூக்க வேண்டும்..
ராணுவத்தை விட்டு ஓடிப் போய் பின்னர் பாதுகாப்பு செயலர் பதவி வகித்தவர்தான் கோத்தபாய ராஜபக்சே. வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் படுகொலை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்; பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து நீதியான விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரங்களுக்காக கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு சரத்பொன்சேகா உரையாற்றினார்.