மோசடி புகார்- ராஜபக்சே மனைவியை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு போலீஸ் சம்மன்!!
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இலங்கையில் ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்றார்.
சிறிசேன அரசானது ராஜபக்சே ஆட்சிக்கால ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியது. இதில் ராஜபக்சேவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக சிக்கியது.
My Mother just received a notice to appear before the #FCID. Tangalle Police handed it over to me just now. 1/4 #SriLanka #lka
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 26, 2015
ராஜபக்சேவின் மனைவி சிராந்தி, சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஜூன் 1-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சிராந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இதன் மூலம் சிறிசேன அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாக நமல் குற்றம் சாட்டியுள்ளார்.