ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி இலங்கையில் 1008 தேங்காய் உடைப்பு
யாழ்ப்பாணம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி யாழ்பாணத்தில் 1000 தேங்காய் உடைத்து இலங்கை தமிழர்கள் வழிபாடு நடத்தினர்.
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இன்னும் தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரிக்கு ஆதரவாக அதிபர் ஓபாமா வாக்கு சேகரித்து வருகிறார். இவர்களில் ஹிலாரிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசிதிபெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இலங்கை தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் 108 மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து பிரார்த்தனை நடைபெற்றது.