ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெ. தலையிட சிங்கள எம்.பி. வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பு
கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட சிங்கள எம்.பி. வாசுதேவ நாணயக்கார கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜபக்சே ஆதரவாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளதாவது:
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலையீட்டைக் கோருவதன் மூலம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவறிழைக்கிறார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அரசாங்கம் உட்பட எதிர்க்கட்சியில் எம்மைப் போன்ற சிலர் இணைந்து வடக்கு- கிழக்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த நிலையில் ஜெயலலிதா இலங்கை விடயத்தில் தலையிட வேண்டுமென விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தீர்வை நோக்கி நகரும் பிரச்சினையை மீண்டும் ஆரம்ப நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்.
தமிழ் மக்களும் - சிங்கள மக்களும் இணக்கப்பாட்டுடன் செயற்பட முன்வந்துள்ளனர். ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சரே தவிர ஜெயலலிதா என்பது இந்தியா அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு வாசுதேவ நாயணக்கார கூறியுள்ளார்.