புலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று!
1995-ல் 5,00,000 தமிழர்கள் புலிகளின் தலைமையை ஏற்று யாழில் இருந்து வெளியேறக் காரணமான இலங்கை ராணுவத்தின் சூரியக்கதிர் ஆபரேஷன் தொடங்கிய நாள் இன்று.
யாழ்ப்பாணம்: உலக வரலாற்றில் மிகப் பெரிய பொதுமக்கள் இடப்பெயர்வுகளில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து 5,00,000 தமிழர்கள் பாரம்பரிய வாழ்விடத்தை, சொத்துகளை விட்டு அப்படியே தமிழீழ விடுதலைப் புலிகளோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய நிகழ்வுதான். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இதற்கு காரணமாக இருந்தது அன்றைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் 'சூரியக் கதிர்' ராணுவ நடவடிக்கை. இந்த சூரியக் கதிர் நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள்தான் 1995 அக்டோபர் 17.
ஈழத் தமிழர்களின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இருந்தது. அதேநேரத்தில் வலிமை வாய்ந்த மாபெரும் போராளி இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததும் இல்லை.
இதனால் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காக பலாலி ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவம் மிகப் பெரிய ஆபரேஷனைத் தொடங்கியது. இதற்கு ரிவிரெச (சூரியக்கதிர்) என பெயரிட்டது இலங்கை ராணுவம்.
சிங்கள முப்படை
இலங்கை ராணுவ தளபதிகள் ரொஹான் தளுவத்த, ஜானக பெரேரா ஆகியோர் தலைமையில் இந்த ஆபரேஷன் தொடங்கியது. 20,000 சிங்கள ராணுவத்தினருடன் விமானப் படை, கடற்படையும் இணைந்து இத்தாக்குதலை நடத்தியது.
கொரில்லாவில் இருந்து ஷிப்ட்
கொரில்லா முறையில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் முறையாக மரபு வழி யுத்தத்தில் இறங்கிய தருணம் அது. சிங்கள ராணுவத்தை தடுத்து விடுதலைப் புலிகள் எதிர்தாக்குதலை நடத்தி வந்தனர்.
புலிகளின் வியூகம்
இருப்பினும் சிங்கள ராணுவத்தின் கை ஓங்கிய நிலையில் விடுதலைப் புலிகள் புதிய வியூகம் வகுத்தனர். 5,00,000 தமிழர்களுடன் பாதுகாப்பாக யாழ்ப்பாணத்தைவிட்டு ஒரே இரவில் பின்வாங்கினர் விடுதலைப் புலிகள்.
வன்னிக் காடுகளில் தஞ்சம்
காலம் காலமாக வாழ்ந்த வாழ்விடங்கள், சொத்துகள் அனைத்தையும் அப்படியே கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தலைமையை நம்பி 5,00,000 தமிழ் மக்கள் அப்படியே பின் தொடர்ந்து வன்னிக்காடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். உலக வரலாற்றின் மாபெரும் மக்கள் இடப்பெயர்வுகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது. இந்த சூரியக் கதிர் நடவடிக்கைக்கு பதிலடியாக விடுதலைப் புலிகள் 1996-ல் வீரம் செறிந்த யுத்தத்தை நடத்தி சிங்கள படையினரை கொன்று குவித்த வரலாறும் அரங்கேறியது.