தமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை.. கூசாமல் பேசும் இலங்கை
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொல்லவில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு: தமிழக மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்றதாக கூறுவதில் உண்மையில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.
இந்த கொலை சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவிட்டு #TNFishermen என்ற ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தியதாக கூறியுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது.
இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ள இலங்கை அரசு மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றதாக கூறுவதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்திய அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை கூறிள்ளது. ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை சுட்டுக்கொன்று விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இலங்கை அரசு கூசாமல் பொய் சொல்வதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.