கொழும்பு ராணுவ கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து.. ஆயுதங்கள் வெடித்துச் சிதறின.. மக்கள் ஓட்டம்
கொழும்பு: கொழும்பு நகரில் உள்ள ராணுவ கிட்டங்கியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு ஆயுதங்கள் வெடித்துச் சிதறியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னர் கொழும்பில் நடந்துள்ள மிகப் பெரிய சம்பவம் இது.
தீவிபத்தில் ஆயுதங்கள் வெடித்துச் சிதறி வெளியே வந்து விழுந்ததாலும், ஆயுதக் கிட்டங்கியில் ஒரு பகுதி பற்றி எரிந்ததாலும், அப்பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சல்வா என்ற இடத்தில் இந்த ராணுவ கிட்டங்கி உள்ளது. தற்போது இங்கு தீ கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் பெரும் புகை வந்தவண்ணம் உள்ளதால் தீ முழுமையாக அணையவில்லை என்று கூறப்படுகிறது.
தீவிபத்தைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய ஆயுதங்களின் பாகங்கள், அருகில் உள்ள நெடுஞ்சாலை வரைக்கும் வந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். கிட்டத்தட்ட 3 கிலோமீட்ர் தூரம் வரை அவை வந்து விழுந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோலத்தான் வவுனியாவில் உள்ள ராணுவ கிட்டங்கியில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் இப்போது கொழும்பில் நடந்துள்ளது.