பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை!
கொழும்பு: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரையை வெளியிட்டதற்காக பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது இலங்கை அரசு.
தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதங்கள் எழுதி வருகிறார். இதனை கொச்சைப்படுத்தி இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த கட்டுரை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தமது இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், தங்களது அனுமதி இல்லாமல் அந்த கட்டுரை வெளியாகிவிட்டது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.