இலங்கை: ராஜபக்சே காலத்தில் தூதர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை
கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே காலத்தில் வெளிநாட்டு தூதர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு படை விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு போரின்போது, விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்த ராணுவ தளபதிகளுக்கு பலவித சலுகைகளை வழங்கினார் முன்னாள் அதிபர் ராஜபக்சே.
பாதுகாப்பு படைகளில் தளபதிகளாக பதவி வகித்த சாந்த கோட்டகொடா, வசந்த கரன்னாகோடா, திசர சமர சிங்கே, ஜெயலத் வீரக்கொடி, விஜேசிறி ஆகிய 5 பேரும் வெளிநாடுகளில் இலங்கை தூதர்களாக நியமிக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். வெளிநாட்டு தூதரக பணியில் ராணுவ தளபதிகளை ராஜபக்சே அரசு ஈடுபடுத்தியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இலங்கையில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபராக சிறிசேனா பதவி ஏற்றபிறகு, ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சாந்த கோட்டகொடா, வசந்த கரன்னாகோடா, திசர சமர சிங்கே, ஜெயலத் வீரக்கொடி, விஜேசிறி ஆகிய 5 பேரிடமும், போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு படையினர் நேற்று விசாரணை நடத்தினர். தூதரக பணியில் அவர்கள் செய்த பங்களிப்பு, அவர்கள் பங்கெடுத்த அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிதிமோசடி வழக்கில் ராஜபக்சே உள்ளிட்ட 5 பேர் இன்று விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நேற்று முன்னாள் ராணுவ தளபதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு வரும் ராஜபக்சே கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.