இந்திய பெருங்கடலில் நுழைகிறது சீனா.. இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வாங்கியது
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அளித்தது இலங்கை.
கொழும்பு : இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது.
இரு இலங்கை நிறுவனங்களாக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் ஆகியவற்றை சீன வியாபாரிகள் துறைமுக நிறுவனம் நிர்வகித்து வந்தது.
இலங்கை துறைமுக ஆணையத்துக்கு சொந்தமான துறைமுகத்தில் முதலீட்டு மண்டலங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த ஏப்ரலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது முன்னாள் அதிபர் ராஜபட்சேவால் அவரது சொந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சீன உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கு பரிமாற்றங்களுக்கு விக்ரமசிங்கே ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விக்ரமசிங்கே பேசுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த தொடங்கிவிட்டோம்.
இந்திய பெருங்கடலில் அம்பாந்தோட்டை முக்கிய துறைமுகமாக மாற்றப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பொருளாதார மண்டலமும் தொழில்மயமாக்கலும் அந்த பகுதியில் நடைபெறும் என்றார் அவர்.
99 ஆண்டுகளுக்கு குத்தகை பணமாக சீனாவிடம் இருந்து இலங்கை 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலில் பெற்றுக் கொண்டுவிட்டது. இதைத் தான் எதிர்க்கட்சிகள் துறைமுகத்தையே சீனாவுக்கு விற்றுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றன.