25 வருட பழைய வழக்கை தோண்டி எடுத்து கருணாவை கைது செய்ய இலங்கை அரசு திட்டம்!
கொழும்பு: விடுதலை புலிகள்-இலங்கை ராணுவத்துடனான மோதலின்போது 600 போலீசார் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு தரப்புக்கு ஓடி வந்த கருணாவை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1990ம் ஆண்டில், இலங்கை கிழக்கு மாகாணத்தில், விடுதலை புலிகளின் பதிலடி தாக்குதலில் இலங்கையின் 600 போலீசார் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகளின் கிழக்கு பகுதி, தளபதியாக இருந்த கருணா இத்தாக்குதலில் முக்கிய சூத்திரதாரி.
ஆனால், இறுதிகட்ட போர் நெருங்கிய நிலையில், கருணா, விடுதலை புலிகள் இயக்கத்திற்கு துரோகம் செய்துவிட்டு இலங்கை அரசுக்கு அப்ரூவராக மாறி, விடுதலைபுலிகளின் பதுங்கு பகுதிகள் உள்ளிட்ட பல ரகசிய தகவல்களை இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்தார். இதனால் ராஜபக்சே அரசாங்கத்தில் அமைச்சர் பதவி தரப்பட்டது.
இந்நிலையில் தற்போது விடுதலை புலிகள் அச்சம் நீங்கியுள்ளதாக கருதும் இலங்கை அரசு, காட்டிக்கொடுத்த கருணாவை கம்பி என்னச் செய்ய திட்டமிட்டுள்ளது. 600 போலீசார் குடும்பத்தினரும் இதையே வலியுறுத்துவதாலும், ஓய்வு பெற்ற போலீசார் சங்கத்தினர் அதிபரை சந்தித்து மனு அளித்துள்ளதாலும், கருணாவை கைது செய்து விசாரிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.