இலங்கை: தமிழர்கள் பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு: 50 ஆக உயர்வு
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.
இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான தலைமன்னார் மாவட்டத்தில், திருக்கேதீஸ்வரம் ஆலயம் அருகே குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சாலையோரம் தோண்டும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள புகழ்பெற்ற இந்து கோவில் அருகே மனித எலும்புக்கூடுகள் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், அந்த பகுதியில் மேலும் தோண்டியபோது, 30க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் மருத்துவக்குழு சட்ட அதிகாரி தனஞ்செயா விஜயரத்னே தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதுவரை பல கட்டமாக தோண்டப்பட்டு எலும்புக்கூடுகள் கணக்கெடுப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மாந்தை மனித புதைகுழியில் இருந்து நேற்று மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுற்று 4 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையில், முதல் முறையாக பெரிய அளவிலான பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.