இலங்கையில் அதிபர் தேர்தல் பொது வேட்பாளர் சிறீசேனா பிரசாரத்தில் துப்பாக்கி சூடு - பெண் காயம்
கொழும்பு : இலங்கையில் பொது வேட்பாளர் சிறீசேனா பிரச்சாரத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுல் பெண் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் வரும் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சிறீசேனா களம் இறங்கியுள்ளார். இவர் ராஜபக்சே அரசில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர்.
தேர்தல் நெருங்கி வருவதால் இலங்கையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், நேற்று போலன்னருவா நகரம் அருகேயுள்ள அரலகன்வில்லா என்ற இடத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா சிறீசேனாவின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இது சிறீசேனாவின் சொந்த ஊராகும்.
பிரச்சாரக் கூட்டம் முடிந்து மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் நடந்த போது மைத்ரிபாலா சிறீசேனா கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டதால், அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், இந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
மேலும், சிலர் தங்களது வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியதாக அக்கட்சியின் துணை தலைவர் ரவி கருணாநாயகா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த சிறீசேனா பிரசார கூட்டத்திலும், ஆளும் கட்சியினர் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலிலும் சிறீசேனா காயமின்றி தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
இதுவரை தேர்தல் மோதல் தொடர்பாக 1,073 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.