ஏப். 23-ல் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு- மார்ச்சில் பிரசாரம் தொடக்கம்: ரணில்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் ஏப்ரல் 23-ந் தேதி கலைக்கப்படும் நிலையில் மார்ச் மாதம் பிரசாரத்தைத் தொடங்க இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 23-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் மார்ச் மாதம் முதல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுத் தேர்தலுக்கு உடனடியாக ஆயத்தமாகுமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் இலங்கை சுதந்திரக் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரக் கட்சியின் பிராந்திய அலுவலகங்கள், இணைப்பு அலுவலகங்களின் உறுப்பினர்களை அழைத்து கட்சியினை பலப்படுத்துமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நல்லாட்சிக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பலமாக இருக்கும் வகையில் அரசு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.