இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்: ராஜபக்சே ஆசை நிறைவேறுமா?
கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
மூன்றாவது முறையாக இலங்கை அதிபராக ஆசைப்பட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் மகிந்தா ராஜபக்சே. ஆனால் அதிபர் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே குருநாகலா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற கனவில் மிதந்து வருகிறார் அவர். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட அவரை பிரதமராக்க மாட்டேன் என்று சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிறிசேனாவின் முடிவை அடுத்து பிரதமர் பதவியை தனக்கே அளிக்குமாறு அவரிடம் ராஜபக்சே மன்றாடி வருகிறார். வாக்குப்பதிவு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியிடப்பட உள்ளது. முதல்கட்டமாக இன்று இரவு 11 மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை தொகுதி வாரியான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
வாக்குப்பதிவையொட்டி இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.