திருகோணமலை: முன்னாள் விடுதலைப் புலி வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்- மனைவி, சகோதரி கைது
திருகோணமலை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் திடீரென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையின் திருகோணமலையில் சேருநுவர என்ற இடத்தில் டி56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்லனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஏராளமான ஆயுதங்கள், கருவிகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த முன்னாள் போராளியின் மனைவி, சகோதரி ஆகிய 2 பேரையும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.