இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழக்கு! உச்ச நீதிமன்றம் கையில் முடிவு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அந்த பதவிக்கு நியமித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் பிரதமராக தொடர்வதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
ராஜபக்சேவுக்கு போதிய எம்பிக்கள் பலம் இல்லாத காரணத்தினால், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மற்றும் வரும் ஜனவரி 5ஆம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!
அதிபரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரனில் விக்ரமசிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் வளர்ச்சி கூட்டணி, அனைத்து சிலோன் மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், குடிமை சமூகம் அமைப்புகளும் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் மஹிந்த ராஜபக்சே, தேர்தல் ஆணையர் மற்றும் அதன் உறுப்பினர்கள் எதிர்மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைக்கவோ, பிரதமரை நீக்கவோ, அரசியலமைப்பின் 19ஆவது சட்ட திருத்தத்தின் கீழ், அதிகாரம் கிடையாது என்றும், பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நலின் பெரேரா, நீதிபதிகள் பிரியந்தா ஜெயவர்த்தனே மற்றும் பிரசன்னா ஜெயவர்த்தனே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.