இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ரணில், ராஜபக்சே கூட்டணிகளிடையே கடும் போட்டி- மாறி மாறி முன்னிலை!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான கூட்டணி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரு கூட்டணிகளும் சிங்களர் வாழும் தென்னிலங்கை பகுதிகளில் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225. இதில் 196 பேர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஞ்சிய 29 எம்.பி.க்கள் கட்சிகள் பெற்ற வாக்குகள் விகித அடிப்படையில் நியமன எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
பெரும்பான்மைக்கு மொத்தம் 113 எம்.பி.க்கள் தேவை. இத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே மற்றும் 60 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 100 சுயேட்சைகள் உள்ளிட்ட 6,151 பேர் போட்டியிட்டனர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் 73% வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போதைய நிலவரப்படி ராஜபக்சேவின் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 44.6% வாக்குகளைப் பெற்றுள்ளது. ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 43.5% வாக்குகளைப் பெற்றுள்ளது.
இடங்களைப் பொறுத்தவரை ராஜபக்சேவின் கூட்டணி 21; ரணிலின் கூட்டணி 20 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
மேலும் முன்னிலை இடங்கள், வாக்கு விகிதம் லேசாக மாறி மாறி வருகின்றன... இதனால் இலங்கை தேர்தல் முடிவுகள் தொடர்பான குழப்பம் தொடர்கிறது.
இன்னும் சில மணிநேரங்களுக்குப் பின்னரே யார் வெற்றி முகம் என்பது தெளிவாகத் தெரிய வரும்.